அனைவருக்கும் வணக்கம்,
தமிழ் மரபு அறக்கட்டளையின் கடிகை முதன்மைநிலை இணையவழிப் பல்கலைக்கழகம் நடத்திய தமிழி கல்வெட்டு எழுத்து (ம) வாசிப்புப் பயிலரங்கம், 18 நவம்பர் 2023 அன்று ஜூம் இணைய வழி நடைப்பெற்றது.
பயிலரங்கத்தில் முனைவர் சுபாஷிணி, தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு மற்றும் முனைவர் சிவராமகிருஷ்ணன், உதவி பேராசியர், குந்தவை மகளிர் கல்லுரி ஆகியோர் பாடங்களை நடத்தினர். ஜூம் செயலிலுள்ள கரும்பலகை கொண்டு ஒவ்வொரு தமிழி எழுத்துக்களாக முனைவர் சுபாஷிணி அறிமுகப்படுத்தினர். உயிர் எழுத்து, மெய் எழுத்து, உயிர்மெய் எழுத்து என்று வரிசையாக நடத்தியது மட்டும் இல்லாமல், பங்கேற்பாளர்களை அவர்களது நோட்புக்கில் எழுதி பழகவும் ஊக்கமளித்தார். இந்தப் பாடத்தின் இறுதியில் தமிழி எழுத்துரு கொண்டு வாக்கியங்களும் அமைத்து பங்கேற்பாளர்களை வாசிக்க செய்தது பெரும் பாராட்டை பெற்றது.
பேரா. சிவராமகிருஷ்ணன் அவர்கள் தமிழி கல்வெட்டு வாசிப்புப் பயிற்சி என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினர். எழுத்துகள் தோன்ற பெண்களின் பங்களிப்பு முக்கியமானது என்பதை உலகெங்கும் உள்ள பல்வேறு சிற்ப சான்றுகளுடன் நிறுவினார். தொல்லியல் ஆய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட பானை ஓடுகளில் உள்ள தமிழி எழுத்துகளைக் காண்பித்து அவற்றை வாசிக்கவும் செய்தார். அவர்களுடைய உரையின் இறுதியாக தமிழி எழுத்துகளின் வளர்ச்சி வட்டெழுத்துக்கள் என்பதை குறிப்பிட்டு, இந்த வட்டெழுத்தின் பரிணாம வளர்ச்சிக்கு சோழர்களுடைய பங்களிப்பை விளக்கினார். நிகழ்ச்சியின் இறுதியாக நடந்த கலந்துரையாடலில் பங்கேற்பாளர்கள் உற்சாகமாக அவர்களுடைய கேள்விகள் மற்றும் கருத்துகளைக் கேட்டு தெளிவு பெற்றார்கள்.
நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை கடிகை இணைய வழி பல்கலைகழத்தின் பொறுப்பாளர், முனைவர் மு. பாமா அவர்களும் அவருக்குத் துணையாக மரபு பயணக்குழு பொறுப்பாளர் திரு. மணிவண்ணன் அவர்களும் செய்தார்கள்.
நிகழ்ச்சிக்கான பதாகை எழுத்துருக் கலைஞர் திரு. நாராயணன் அவர்கள் தயார் செய்தார்கள்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் மின்-சான்றிதழ் அவர்களுடைய மின்னஞ்சல் முகவரி அனுப்பி வைக்கப்பட்டது. கூகுள் பார்ம்ஸ் வழியாக பெறப்பட்ட பின்னூட்டம் மூலம் நாம் அறிவது, தமிழி எழுத்துகள் (ம) கல்வெட்டுகள் பற்றிய தகவல்கள் பலரையும் சென்று அடைந்துள்ளது. தமிழி கல்வெட்டுகளை வாசிக்க மற்றும் பாதுக்காக்க, வரலாற்றை பாதுக்காக்க பல தன்னார்வளர்களை இந்தப் பயிலரங்கம் தயார் செய்துள்ளது. நம் தமிழ் மரபு வளரும் என உறுதியாக நம்புகிறோம்!
மாதிரி சான்றிதழ்: