தமிழ் ஜப்பானிய ஒப்பாய்வு- எதிர்காலச் செல்நெறி
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் தெற்காசியவியல் நடுவம் அமைப்பு நடத்தும் தமிழ் ஜப்பானிய ஒப்பாய்வு தொடர்ச்சியாக இரண்டாவது நாள் உரை திருமதி மனோன்மணி சண்முகதாஸ் அவர்களுடைய சிறப்புரையோடு இன்று நடைபெற்றது. திருமதி மலர்விழி பாஸ்கரன் அவர்கள் வரவேற்புரையாற்ற தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் தலைவர் முனைவர் சுபாஷினி அவர்கள் ஜெர்மனியிலிருந்து வாழ்த்துரை வழங்கினார் பேராசிரியர் கண்ணன் அவர்கள் நோக்க உரை வழங்கினார் “ஜப்பானிய ஒப்பாய்வு எதிர்கால செல்நெறி” என்ற தலைப்பிலே திருமதி மனோன்மணி சண்முகதாஸ் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.
ஆய்வுகள் தொடர்ச்சியாக நடைபெறுவதற்கு எத்தகைய சூழ்நிலை தேவைப்படுகிறது என்பதை விளக்கி எதிர்காலச் செல்நெறி பற்றிய பல கருத்துக்களை விளக்கினார்கள். ஆய்வு செய்வதற்கு முன் திட்டமிடல் வேண்டும் இதற்கு முன்னோடியாக இருக்கக்கூடிய தரவுகள் ஏற்கனவே செய்யப்பட்ட ஆய்வுகள் முதலியவற்றைப் பயன்படுத்தி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கடந்த காலப் பட்டறிவைப் பெற்று எதிர்கால ஆய்வை எப்படி எடுத்துச் செல்ல வேண்டும் என்பதையும் விளக்கினார்.பேராசிரியர் ஓனோ தமிழ் ஜப்பானிய ஆய்வினை 1971 முதல் 1981 வரை மேற்கொண்ட நிகழ்ச்சியைக் கூறி அதில் தாம் அவருடன் 1983 முதல் 1987 வரை உடன் இருந்து பணியாற்றியதை நிகழ்ச்சியை நினைவு கூர்ந்தார். 1983 முதல் 1987 வரை நான்கு ஆண்டுகள்
ஜப்பானிய மொழி கற்று ஜப்பானிய, தமிழ் மொழி இலக்கிய ஒற்றுமைகளை ஆராய்ச்சி செய்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.ஜப்பானிய தமிழ் மொழி ஆராய்ச்சியில் ஈடுபடுவோர் இருமொழிப் புலமையும் பெற்றிருக்க வேண்டும் என்பதை மறுபடியும் உறுதிபடக் கூறினார். இந்த ஆராய்ச்சியின் போது என்னென்ன சிக்கல்கள் எழும் என்பதை நான்கு கட்டங்களாகப் பிரித்து முதலாவதாக மொழிப்புலமை இரண்டாவதாக இருமொழி இலக்கியப் புலமை மூன்றாவதாக தரவுகளைத் தேடுகின்ற நிலைகளில் உள்ள சிக்கல் இறுதியாக நிதிச் சிக்கல் என நான்கு வகை சிக்கல்களைக் கூறி இவை எதுவுமே தமிழர்களுக்குப் பெரிய சிக்கல்கள் இல்லை எனவும் தெளிவுபடுத்தினார். தொல்காப்பியம் பற்றிய விழிப்புணர்வு வேண்டும் எனவும் ஏனைய அறிவியல் துறை சார்ந்த ஆய்வுகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் தொழில்நுட்ப நிலையில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என பல விஷயங்களை கூறினார்.
வரும் தலைமுறையினர் ஆய்வு செய்ய பல தலைப்புகளையும் கூறி குறியீடுகள் இரண்டு இனங்களுக்கு இடையேயான தொடர்பு உதாரணமாக பிறப்பு பூப்பு திருமணம் இறப்பு போன்ற தொடர்புகளுக்கான விடயங்களை தேட வேண்டும், தமிழ் ஜப்பானிய அகவாழ்வு புறவாழ்வு எப்படி இருந்தது நிலப் பாகுபாடு எப்படி இருந்தது தொழிற்சாலை கட்டமைப்பு எப்படி இருந்தது இலக்கணப் பாகுபாடு எப்படி இருந்தது என்பதையெல்லாம் முன்வைத்து வரும் தலைமுறையினர் ஆய்வுகளை மேற்கொள்ளலாம் என்றும் தான் மன்யுசிப் பாடல்களில் முப்பது பாடல்களை மட்டுமே மொழிபெயர்த்ததாகவும் வரும் தலைமுறையினர் மீதமுள்ள பாடல்களை மொழிபெயர்க்கக் களம் இருக்கிறது என்பதையும் சுட்டிக் கட்டினார்.
ஹிரோஷிமாவில் குண்டு வீசப்பட்ட அன்று மாணவர்கள் ஒரு தலைப்பை பற்றி கட்டுரை எழுத இருந்த வேளையிலே எழுத ஆரம்பித்த 15 நிமிடங்களில் அவர்கள் இல்லாமல் போனதை உருக்கமாகக் கூறி அவர்கள் எழுதி எறிந்த காகிதம் போக மீதமுள்ள காகிதங்களை பாதுகாத்து வைத்து வரலாற்றுப் பதிவாக அவர்கள் சேமித்து வைத்த நிகழ்வைச்சொல்லி வரலாறு பதிவுசெய்யப்படுவதன் அவசதியத்தையும் பயன்களையும் விவரித்தார். மன்யுஷிப் பாடல்களில் இன்னும் உறவு நிலை பற்றிய ஆய்வு பதிவு செய்யப்படாமல் இருக்கிறது என்றும் அது செய்யப்பட வேண்டும் எனவும் மன்யூசிப் பாடல்களை 18 தொகுதிகளும் வரும் இளம் தலைமுறையினர் மொழிபயர்க்க வேண்டும் அதற்கு இருமொழிப் புலமையும் அவசியம் என்பதை மறுபடியும் வலியுறுத்தித் தனது உரையை நிறைவு செய்தார். பார்வையாளர்கள் கற்பகவல்லி குமரகுருபரன் நாகை சுகுமாரன் போன்றோரும் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர் பேராசிரியர் கண்ணன் அவர்கள் ஜப்பான் கொரியா தமிழ் முக்கோண தொடர்பினை தெளிவுபடுத்தி சின்னங்கள் குறியீடுகள் போன்றவற்றை விளக்கப்படமாக காண்பித் தார். திருமிகு மலர்விழி பாஸ்கரன் அவர்கள் நன்றியுரை சொல்ல இன்றைய நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது
அறிக்கை தயாரிப்பு –
நா. காமினி பாஷ்யம் & மலர்விழி பாஸ்கரன்